Tuesday, January 21, 2014

chithirame chithirame...



சித்திரம்போல் சித்திரம்போல் சிரித்திருப்போமே !


சிலையைப் போல உலகை நாமும் மறந்திருப்போமே !

Friday, January 10, 2014

 
செய்வது அறியாச் சிறு நாயேன்
செம்பொன் பாதம் மலர் காணாப்
பொய்யர் பெறும் பேறு அத்தனையும்
பெறுதற்கு உரியேன் பொய் இலா
மெய்யர் வெறியார் மலர்ப் பாதம்
மேவக் கண்டும் கேட்டிருந்தும் 

பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு 
இருப்பது ஆனேன் போர் ஏறே 

.... திருவாசகம் 

பொறி வாயில்களான ஐந்து வழிய யானைகளையும் அழிக்கின்ற போரில் அரி ஏறுபோன்றவனே! பொய்யாகிய உலக வாழ்வில் பற்றற்ற மெய்யன்பர்கள் நறுமணம் கமழும் தாமரை மலரொத்த திருவடிகளை அடைதலை நேரில் கண்டிருந்தும், நீ அறிவுறுத்தியருளக் கேட்டிருந்தும், அந்நெறியிற் செல்லமாட்டாது பொய்யாகிய உடலோடு வாழும் உலக வாழ்க்கையை உடையேனாகிய யான் இவ்வுடலைப் பேணும் பொருட்டு உண்டும் உடுத்தும் இருப்பவனாயினேன். இதனை நீக்குதற்கு செய்யத்தக்கது இன்னதென்று அறிந்து கொள்ள இயலாது சிறுமையான நாய் போன்ற நான் , உனது சிவந்த பொன் போன்ற திருவடி மலர்களைக் காணும் பேறு இல்லாத பொய்யான உலக வாழ்க்கை வாழ்கின்றவர்கள் பெறத்தக்க துன்பப் பேறுகள் அத்தனையும் பெறுவதற்குரியவன் ஆகிறேன்.


கோதை தனபாலன்  
கம்பராமாயணம்..    ( ஒரு ஒப்பீடு .. படித்தது.)

'' It was hard for Hitchkock's colleagues to understand how a man doing such a stressful work could stay so calm and detached.'

....Robert Green ..p.31.

 ஹிட்ச் காக்கின் வெற்றியின் ரகசியமே அவர் மனநிலையை எந்த ஒரு அழுத்தத்திற்கும் இடம் கொடாது சமநிலையில் வைத்து காரியம் சாதித்ததுதான் அவரை வெற்றி வீரராக்கியது.
இங்கு இதே கருது கம்பராமாயணத்தில் ராமனைப் பற்றி வர்ணிக்கும் இடத்தில எடுதியம்பப்படுகிறது.  முதல் நாள் அரசுரிமை சொல்லி தசரதர் கொசலனாட்டின் மணிமகுடத்தை அவனுக்குச் சூட்ட விழைந்தபோதும் சரி, மறுநாள் கைகேயி பெற்ற  வரத்தின் பயனால் பரதனுக்கு  மகுடம்  மாறும் நிலையிலும் சரி...ராமனின் பேராசை, சந்தோசம்,வருத்தம் எதுவும் காணாத சமநிலை   தோற்றத்திலேயே இருந்தது...  உணர்த்தும்பாடல்..

''தாதை  அப்பரிசு உரை செய , தாமரைக் கண்ணன் 
காதல் உற்றிலன்; இகழ்ந்திலன் ;கடன் இது என்று உணர்ந்தும் 
யாது கொற்றவன் ஏவியது, அது செயல் அன்றே 
நீதி எற்கு என நினைந்து , அப்பணி தலை நின்றான்.'
....மந்திரப்படலம் ..69.       
   
 ' என் இனி உறுதி அப்பால் . இப்பணி தலைமேற் கொண்டேன் 
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன் ..'
.......கைகேசி சூழ்வினைப்படலம். 114   

இந்த இரண்டு சூழ் நிலையையும் ராமனை நெருங்கி கிட்டத்தில் இருந்து பார்த்தவள் சீதை.அரசு என்றபோதும் , காடு என்றபோதும் இராமன் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாது கல்போல் இருந்தது..அதே சமநிலைத் தோற்றம் 13 ஆண்டுகள் கழித்தும் மறக்கமுடியவில்லை... அதனால் தான்  பாதகர் சிறையில் தான் வாடியபோதும்...அவளின் மலரும் நினைவுகளில்  
அந்தக் காட்சி நிழலாடுகிறது.  சொல்லும் பாடல்...

'மெய்த் திரு பதம் மேவு என்ற போதிலும் 
இத் திரு துறந்து ஏகு என்ற போதிலும் 
சித்தரத்தின் அலர்ந்த செந்தாமரை 
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள் .'
....காட்சிப் படலம் 20


 கோதைதனபாலன்.

Friday, January 3, 2014




கண்ணனைக் கண நேரமும் பிரியா கண்கள் ! 
கண்கள் மூடினால் உன்னைக் கண்டேன்...இரு கண்கள் திறந்தால் உன்னைக் காண்பேன்... இவள் 
கண்ணதாசனின் ராதையோ ! கோதையோ !!

கோதை தனபாலன் 








ஆன்மீகத்தில் எனக்கு மனதில் பதிந்த ஒன்று .. நம்மாழ்வார் கூற்று.


செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் ,எத்தைதின்று எங்கே கிடக்கும்..? இது மதுரகவி ஆழ்வார் கேட்டகேள்வி. இதற்கு பதில் சொல்லுமுகமாகவே பாலகப் பருவத்தில் நம்மாழ்வார் முதல் முறையாக இப்படி திருவாய் மலர்ந்தருளினார்.. " அத்தைத் தின்று அங்கே கிடக்கும். நமக்கு மேலார்ந்த பொருளில் ஒன்றும் விளங்காது. ஆனால் சுற்றியிருந்த பக்த சிகாமணிகளுகேல்லாம் அந்த தத்துவம் விளங்கிற்றே.

கேள்வியின் பொருள்... இந்தஉடல் இப்பிறவியில் நீங்கி புது பிறவியாக புது உடல் பெற்றால் எதைக் கொண்டு ,எதன் அடிப்படையில் தன் உயிரை வளர்க்கும்.?
பதிலின் விளக்கம்...
அது எந்த ரூபமாகப் பிறவி எடுத்துள்ளதோ அந்த உயிரினம் அல்லது உயிர்ப்பொருள் ஒழுங்குகளிலிருந்து தன வாழ்க்கையைத் தொடங்கும்.

இதைப் புரிந்து கொண்ட பொழுது ... ஔவை சொன்னதே நினைவில் ஓடியது.

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது..மானிடராயினும் ..கூன் ,குருடு, செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது.

தமிழ் ஆன்மீக பக்தி இலக்கியங்கள் பல நம்மிடை இருக்கையில் படித்து பயன் பெறாமல் காலத்தைக் கழிப்பது வீணே .



கோதை தனபாலன்.









































 



சின்ன நெடுங்கூர்

ஐந்தாம் வகுப்பின் அரையாண்டுத்தேர்வு முடிந்தது. இனி விடுமுறை நாட்களை
எவ்வண்ணம் கழிப்பது என்ற சிந்தை யுடனே ...கையில் அம்மா கொடுத்த
முறுக்கொன்றை வைத்து, சுவைத்து .. இலங்கை வானொலியில் தமிழ்த் திரைப்
பாடல்களை ஆனந்தமாய் ரசித்து் கொண்டிருந்தேன். வெளிக்கதவில் தாழ்ப்பாள்
தட்டப் படும் ஓசை கேட்டு திரும்பிப் பார்க்கிறேன்...முகத்தில் ஒரே பரவசமாய்
ஓடோடிச் சென்று கதவைத் திறந்தேன்... அங்கே என் தாத்தா ...தலையில் முண்டாசு
கட்டிக் கொண்டு, முக்கால் கைச் சட்டை ஒன்று தொளதொளவென்று அணிந்து,
கணுக்கால் ஏறிய நான்கு முழ வேட்டி ஒன்று கட்டிக் கொண்டு... நின்று
கொண்டிருந்தார்.. அதே வேகத்தில் திரும்பி...’அம்மா ! தாத்தா
வந்திருக்கிறார் ...’ என்று அடுப்படிக்கு ஓடோடிசென்றேன். அம்மாவுடன்
திரும்ப வருவதற்குள் அவர் பட்டசாலையில் ஒரு பெஞ்சில் அமர்ந்து தன்னை
ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தார். ‘வான்னா.. ‘ அம்மா கொங்குத் தமிழில்
விளிக்க.. ஆமாம்...அப்பாவை அன்று அப்படித்தான் அழைப்பார்கள். பிசிறான
ஒருவித கரகரத்த குரலில் அவர்... ‘விட்டலாபாயி ..! புள்ளைங்களுக்கு பரீட்சை
முடிஞ்சிருக்கும்.... கிணற்றில் இடுப்பளவு தண்ணீர் இருக்கும்போது
அவர்களுக்கு நீச்சல் கற்றுத் தரனும்....கூட்டிட்டு வாங்கன்னு
...தங்கம்மா...( எங்கள் அம்மாயி பெயர் )சொல்லி அனுப்பிசிருக்கா’...
அதுக்கேண்ணனே...இன்னிக்கு பரீட்ச முடிஞ்சுது நாளைக்கு கூட்டிட்டுப்
போங்க..’ என்று சொல்லி ஒரு சொம்பு நிறைய மோர் ..அவருக்கு பருக அம்மா கொண்டு
வந்து கொடுத்தாங்க.

மறுநாள் சாக்குத்துணியில் தைத்திருந்த அந்தக் காலப் பைக்கட்டில் எனது, என்
தங்கை, என் அண்ணன் மூவரின் துணிகள் திணிக்கப் பட்டு நானும் தங்கையும்
தாத்தாவின் கைகளைப் பற்றிக் கொண்டு பஸ்ஸ்டாண்டு சென்றோம்...எங்கள் ஊர் ஒரு
குக் கிராமம் , சின்ன நெடுங்கூர் காணும் ஆவலில். கரூரிலிருந்து கோவை
செல்லும் மார்க்கத்தில் 12 வது கல் அதாவது மைல் தொலைவில் அந்த ஊர் உள்ளது.
மணி நேரம் காத்துக் கிடந்து ஒரு வழியாய் பஸ்பிடித்து பயணித்து.. காருடையாம்
பாளையம் ஒத்தக் கடையில் இறங்கினோம். இனி எதிர்புறம் தெரியும் விலக்கில் (
பாதை பிரிவு ) இறங்கி நடக்க வேண்டும் பஸ்  நகரவும் சிறு பிள்ளைகளும், பருவ
மங்கையரும் ஓடி வந்து அது நின்றிருந்த இடத்தில முகம் குனிந்து ....அந்த
பெட்ரோல் வாசத்தை முகர்ந்து சந்தோஷப்பட்டனர். அன்று அவை எல்லாம் புதியதின்
தாக்கங்கள். அந்த வயசிலும் நாங்கள் இந்த அப்பாவித்தனத்தை எண்ணி ரசித்தபடியே
பிரிவுப் பாதையில் இறங்கி நடக்கலானோம். பாதை இருமருங்கிலும் உயரம் குறைவான
கருவேல மரங்கள். எண்ணி எடுத்தாற்போல் கண்களில் தெரியும் வளர்ந்த பனை
மரங்கள் ! சிவப்பு நிறம் மேவிய மண்ணில் சரி போட்டியாகக் கூழாங்கற்கள்
பரவலாகக் கிடந்தன. வானம் , மேகம் காணாத உயரத்தில் , ஒரு வெட்ட வெளியில்
நீருக்கு ஏங்கும் மணற்பரப்பில் எங்கள் நடைப் பயணம் தொடர்ந்தது. வானம்
பார்த்த பூமியில் மழை குறைவு.  ஆங்காங்கே ஆட்டுப் பட்டிகளைக் கடந்து, ,
பத்துப் பதினைந்து வீடுகளே உள்ள ஒரு சிற்றூரைக் கடந்து...பாதை வளைந்து
வளைந்து நீண்டது. ஏதோ சில பறவைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பறந்த
நிலையில்....அதோ ! சிறிய பிள்ளையார் கோயில் கோபுரக் கலசம் கண்ணில்
தெரிகிறது. எதிர்புறத்தில் ஊருக்குப் பொதுவான பெரிய உரலில் மூன்று
உலக்கைகள் மாறி போட்டு சில பெண்கள் சோளம் குத்துகின்றனர். ஒரு மச்சு
வீடு..., ஓரிரு ஓட்டு வீடுகள்.. மற்றவை பனை ஓலை வேய்ந்த குடிசைகள்... ஆனால்
அவை சாணம் தெளித்து வைக்கப் பட்ட பெரிய உள்முற்றங்கள் கொண்டவை. சுற்றுப்
புறச் சுவர் மணற்கலவையால் எடுக்கப் பட்டவை... இதோ காட்டாறு ஓடிய
தடத்தைக் கடந்தாயிற்று.. இடது பக்கம் ஆள் அரவமே காணாத தூரத்திற்கு
ஆவாரங்காடு....வலது புறம் பெரிய அரசமரம்,சற்று தள்ளி பவுதியாயி அம்மன்
கோயில், அதையொட்டி காட்டாறு பாய்ந்த தடத்தில் வளைவுகளுடன் சிறு சிறு
மணற்திட்டுகள். வீடும்  நெருங்கிற்று. பொதுக் கிணற்றில் குடிக்க நீர் எடுக்கும் சில பெண்மணிகள்  ...விசாரணைக் கணைகள் எங்களிடம்... ‘ஆயா,
ஆயா...மீனாக்ஷி கோனாரு பேரன் பேத்தி எல்லாம் வர்ராங்க..!’ சின்ன அம்மணி என்ன
படிக்குது ? உங்க ஆயா என் இங்கே வரமாட்டேங்குது..?’ நீதான்  கோயமுத்தூர்ல படிச்ச
பொண்ணா...’ இனி நீ அடுத்து பெரிய மனுஷியாயிடுவ போல இருக்கே
!’......இத்யாதி...இத்யாதி...எல்லாத்துக்கும் புரிஞ்சும் புரியாமலும் பதில்
சொல்லிட்டு ..வீட்டினுள் நுழைந்தாயிற்று. உள் வாசல் அம்மாயி சாணம் போட்டு
நேர்த்தியாக தெளித்து பளிச்சென்று வைத்திருந்தது. இடது பக்கம் சீமை ஓடு
வேய்ந்திருந்த வீடு.. செங்கற்சுவரால் ஆனது... கம்பிக்கதவு போட்டது.
எதிர்புறம் தகரத்தால் வேய்ந்திருந்த அடுக்களை..வலது புறம் பனைஓலை வேய்ந்து
சுண்ணாம்புக் கலவையால் மெத்தியிருந்த கொட்டம். எங்களுக்கு அதுதான்
பட்டாசாலை.ஒரு கயிற்றுக் கட்டில்...அதுதான் சோபா..அடுப்படியில் ஒரு பெஞ்ச்
அதுதான் சாப்பாட்டு மேசை. கொட்டத்துப் பரணில் பெரிய அளவிலான தாழம்பூக்
குடை... மடக்க முடியாதது...வட்ட வடிவம் உள்ளது... ஆனால் அழுத்தமாய்...என்றோ
ஒருநாள் பெய்யும் மழைக்காக. அடுத்து ஒரு பெரிய ..பக்குவப் படுத்தப் பட்ட
சுரக் குடுக்கை. நாங்கள் நீச்சல் கற்றுக் கொள்ளப் பயன்படுவது.

அம்மாயி எங்களைப் பார்க்கவும் கதைகள் பல கேட்டு ..சின்ன அம்மாயி .நன்கு
மனமுள்ள பருப்பும், நெய்யும் போட்டுப் பிசைந்த பூப் போன்ற மலர்ந்த
சாதத்தைப் பிசைந்து , வதக்கிய கத்திரிக்காய்க் கூட்டுடன் எங்களுக்கு
ஊட்டினார். இனி எங்களது தேடுதல் வேட்டை ஆரம்பம். பின்புற வாசலுக்கு பசு மாடு
பார்க்கச் சென்ற அண்ணன் கேட்டது..தாத்தா !! ‘ இது என்ன ரண்டு
வெள்ளாடுகள்.. ‘ ஒன்றுமில்லை ஜானகிராமா! ஆட்டுப்பால் நல்லது எனக்கு
...என்று வாங்கிக் கட்டினேன்... சொல்லி சிறிது பால் கரந்தும் குடிக்கக்
கொடுத்தார்.. நாங்கள் சைவம் மட்டும் எடுப்பவர்கள். பிறகு சிறுமியர் எங்கள்
பார்வையில் ... கோபால் பல்பொடி பாக்கெட், ரெமி பவுடர்,சாந்து  பொட்டு, கண்மை
.... கையில் எடுத்துக் கொண்டு தாத்தா இதல்லாம் இங்கு கிடைக்குதா... தங்கை
கேட்கிறாள்.. அதோடு...’ சினிமா நட்சத்திரங்களின் அழகு தாரகை சோப்பு ...
லக்ஸ்... எங்கள் முகத்தில் புன்முறுவல்.. ‘ செகு...( ஜெகதாம்பாள் பேரின்
செல்லச் சுருக்கம் )நீங்கல்லாம் வர்றீங்கன்னு முந்தா நாள் பரமத்தி
சந்தையில் போ’’ய் வாங்கி வந்தேன்.’ இதைக் கேட்கவும் என் உள்ளம்
இளகியது..அந்த ஊருக்கு இன்னும் ஐந்து மைல் செல்ல வேண்டும்... இந்தச்
சிரமங்கள் எங்களுக்காகதானே ...சைக்கிளில் சென்று பிரியமுடன் வாங்கி
வைத்திருக்கிறார்கள்.மாலை நேரம் வந்தது.. ஒரு பொட்டு வண்டியில்
கட்டியிருந்த ஒலிப் பெருக்கியில்...’ ‘இவர்தானா...அவர் கானா.... ‘ பாட்டுச்
சத்தம் கேட்டது. திலகம்... திரைப்பட நோட்டீசு விநியோகம்.என்றாவது ஒரு நாள்
பரமத்தி டூரிங் டாக்கிசுக்கு புதுப் படத்திற்கான அழைப்பு. முன்னிருட்டும்
நேரம் வந்தது. மின் விளக்கு இல்லா ஊரில் சீமைத் தண்ணியில் விளக்கெரிய
வேண்டும். அந்தத் தண்ணி விற்பனை, எங்கள் தாத்தாவிடம்... ஒரு பாட்டில்
எண்ணெய் நாலணா ... அந்த நாலணாக்களை அடுக்கி அழகு பார்ப்பதில்...எங்களுக்கு
ஆர்வம் அதிகம். விற்பனை முடிந்தது... தாத்தாவைக் கவனித்தேன். பனை ஓலைச்
சுவடி ஒன்று எடுத்து , எழுத்தாணியால் ..அன்றைய வரவு செலவு கணக்குகளை
எழுதினார்...நானும் எழுதறேன் என்று அடம் பிடித்து
வாங்கினேன்...முடியவில்லை.. எதுவும் ஒலையின் பதப் படுத்தலிலும், ஆணி
பிடிக்கும் கைப்பழக்கதிலே யும் உள்ளது எனப் புரிந்தேன். பிறகு அவர்
அடுப்புக் கரி ஒன்ற எடுத்து ஈரத்தில் உரசி அந்தப் பசையை எழுத்துகளின் மீது
தடவ எழுத்துகளை நன்கு படிக்க முடிந்தது, அடுத்து சற்று நேரத்திற்கு வெளியே
நீளக்கப் போட்டிருந்த கல் திட்டில் அமர்ந்தோம். அக்கம்பக்கத் தோர்
அருகமர்ந்து உரையாடியது நினைவில் பசுமையாக. பின்னர் அம்மாயியின் குரல்
கேட்க ... அவர்கள் கையில் பாலன்னம் உண்டு...திறந்த வெளியில் வானத்தில்
துல்லியமாய்த் தெரிந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டே ..அவ்விடத்தே
உறங்கிட... ஒவ்வொருத்தராய்  கொட்டத்தில் படுக்க வைப்பது தாத்தாவின்
வேலை.   மறுநாள் காலை பொழுது புலர்ந்தது. மல்லிப்பூ மிருதுவாய் இட்லி சுடச்
சுட நல்ல கெட்டித் தேங்காய் சட்னியோடு...இதுதான் எங்களுக்கு அப்போதைய
சிறப்பு பலகாரம்...சின்னம்மாயி ஊட்டிவிட...

தாத்தாவுடனும்...அம்மாயியுடனும் இரண்டு பர்லாங் தொலைவில் உள்ள எங்கள்
தோட்டத்திற்கு நடந்தோம்... நடுவில் கிணற்றில் இறங்கினோம். தங்கையின்
இடுப்பில் புடவை ஒன்றின் நுனியை இறுகக் கட்டி ..மற்றொரு முனையைத் தாத்தா
சற்று உயர நின்று பிடிக்க...ஆழமற்ற படிக்கட்டு பக்கத்திலே அவளுக்கு நீச்சல்
பாடம்...கைகளுக்கும்..காலுக்கும்.. எனக்கோ முதுகில் சுரக்குடுக்கை
கட்டப்பட்டு.. உள்பக்கம் தள்ளிவிட்டனர்... மிதந்தோ, நீச்சலடித்தோ நான் கரை
சேர வேண்டும்... அண்ணனோ பயமுறுத்துதல் போன்று...மேலே ஏத்துமரத்தில் ஏறி
நின்றுகொண்டு .. அப்பொழுது வெளியான ஆங்கிலப் பட ஹீரோ... ‘ நான்தான் கேப்டன்
மார்வல் ’ என்று கூவி கிணற்றில் குதிக்க.... ‘ ...அந்த சூழல் எல்லாமே
அன்றைக்கு ஒரு நிஜ வசந்தம்....இன்றைக்கு ஒரு கனாக் காலம்...’




கோதை தனபாலன்.

பெரிசுகளின் அட்டகாசம்...

‘அக்கா, பால் கறக்க கார்மேகம் வந்தாச்சு..!
‘இந்தா வர்றேன்...ஒரு சொம்பு எடுத்துக் கொண்டு கொடுக்க , கறந்த பாலையும் வாங்கி... சில்லறைக்கு ஊத்தற கணக்கை வெளியேற்றி விட்டு..
‘மருதா, கன்றை நல்லா மோதவிட்டு, சற்று துள்ளவ
ிட்டு கட்டு... மாட்டுக்கு இரைய அள்ளி வச்சுட்டு வா.. புண்ணாக்கு ஊறப்போடனும், மார்கெட்டுக்கு வேற போகணும்..
எனக்கு அடுப்புல வேலை .. சீக்கிரம் சட்னியை அரைச்சு கொடுத்துட்டு , அப்புறம் அவங்களுக்கு அந்த மஞ்சள் தனியாக கொஞ்சம், மிளகாய் மல்லி சீரகம் தனியா அரைச்சுக் கொடு... ஆமாம் அப்போதெல்லாம் மிக்சி இல்லை... கட்டளைகளை பிறப்பித்துவிட்டு காலை டிபன் இட்லி ஊத்தலானேன். இப்படி ஒன்பது , பத்துமணிக்குனு டிபன் சாப்பிட்டா மதியத்துக்கு எனக்கு சைவம் தனியா , அவங்களுக்கு அசைவம் தனியான்னு வேலை எப்ப முடியறது... என்று மனம் சலிக்க, பாட்டி... பாட்டி... ஊரிலிருந்து ஒரு உறவுகாரர் வந்திருந்தார்.. ‘ நீங்க வாத்தியாரம்மாவோட பார்க்கற வேலையைப் பாருங்க.. எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. அந்த பாட்டிக்கு விபரம் தெரியும்.. என்று என் உள்ளிருப்பு வேலைகளைக் கவனிக்கலானேன்.
‘அக்கா ! மருதன் கூப்பிட்டான்...
‘அரைச்சுட்டேன்.. எல்லாம் எங்க வைக்கறது..மஞ்சளை மட்டும் அங்கேயே அந்த பிளாஸ்டிக் தட்டில் வச்சுட்டு மத்தத்தை எடுத்துட்டு வா...’ அப்புறம் அந்தக் கோழி, குஞ்செல்லாம் திறந்து வெளில விடு.. கொஞ்சம் வெங்காயத்தையும், சோறு இந்தா அதுக்கு போட்டுட்டு.. வா..மார்க்கெட்டுக்கு போகணும்.புண்ணாக்கு ஊறப் போட்டாச்சா.. இல்லாட்டி அதையும் வாங்கிட்டு வா...’

‘ ஏய் , வாத்தியாரம்மா எங்கே போனே ? கோழிய பிடிச்சுட்டியா ’‘ ...எழுபத்தைந்து வயது பாட்டி, கூவிக்கொண்டே ,கால்முறிவு அறுவை சிகிச்சை கொண்டதால் ஒரு காலை வலுவாக ஊன்றி ஊன்றி தாங்கி நடந்து கொண்டே புறக்கடைக்கு செல்ல.. ‘ என்னம்மா நீயி, அப்பவே நான் பிடிச்சு வைசுட்டேன்ல, சீக்கிரம் வருவியா ...அடடா ...துள்ரதை பாரு...அடேய் மருதா , செத்த இதே பிடி...’ ....; போம்மா போ. நான் கடைக்குபோவனும், மாடு குளிப்பாடனும் கொள்ள வேலை இருக்கு...’ ‘சரி, சரி....யம்மா லட்சுமியம்மா நீங்கதான் பிடிங்க...அந்த அருவாமனையத்தான் அப்படியே எடுத்துட்டு வாங்க...என் பாட்டியை விளிக்க, அதுவும் முனகிக் கொண்டே... ‘ என்ன பண்றது ! ம்ம்ம் ....கறி சாப்பிடாத பிள்ளைய கட்டிவந்து கறி சாப்பிடறவனுக்கு சமைக்கச் சொன்னா ... பாவம் அது காலேஜ்ல படிச்சது...பாதிய்லேயே கல்யாணம்... இதைச் சொன்னாலே அழுவுது...பேரனுக்கு இன்னும் நாமதான் சமைச்சு போடணும்... திண்டுக்கல் கறியில உப்புக் கண்டம் போட்டு பொரிச்சு வச்சா அப்படி சாப்பிடுமாக்கும்.... எல்லாம் கொடுப்பினை வேணும்... பாட்டியின் இந்த முணுமுணுப்பு என் காதில் விழ , இந்த எழுபது வயதிலும் இவங்களுக்கு எப்படி, இப்படி திரியிற உசுர புடிச்சு , கொடூரம்மா ..சாப்பிடற ஆசை வருது... சே,சே நினைக்கவே மனசு தாங்கல ..சரிதான் இன்னைக்கு பின் கொட்டம் ...ஒரு கொலைக்க்களம்தான்...என்ன மனுஷங்க...!. இது நான்.
‘ டேய் ! மஞ்சள் அரைச்சது எங்கடா ?;... ‘சின்ன தட்டுல இருக்கு பாருங்க... ‘ சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன் .. அங்கு சோலி முடிஞ்சுது...சின்ன சின்ன சிறகுகள் கீழே விழுந்திருந்ததை கைகளினால் அப்புறப் படுத்திவிட்டு , தோல் நீக்கி மஞ்சள் பூசும் வேலை.... உள்ளுக்குள் நான் ‘ கர்மம்,கர்மம் என புகைந்துகொண்டு மாலை வரை அந்தப் பக்கமே போகக் கூடாது என எண்ணிக் கொண்டு சைவ சமையல் கத்திரிக்காய், முருங்கக் காய் போட்ட சாம்பார், பீன்ஸ் பொறியல் வைத்து விட்டு, இட்லி, சட்னி சகிதம் சாப்பாடு மேசையில் வைத்து விட்டு குளிக்கச் சென்றேன். இனி அந்த இரண்டு மூதாட்டிகளுக்குத்தான் அடுப்பில் வேலை. அரைமணி சென்றிருக்கும் .. அதன் வாடையை சகிக்காது தவிர்க்க எண்ணி முன் பக்கத்து திண்ணையில் வந்தமர்ந்து கொண்டு அந்த வார ஆனந்த விகடனை புரட்டலானேன்,
‘ ஆத்தா... அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன்..பக்கத்துக்கு வீட்டு கூலுபிள்ளை .. வந்தார்.. என்னைத் தாண்டி பின்புறம் போகாமல் கண்களை மட்டும் ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தார் . அவருக்கும் அப்போது அறுபது வயதுக்கு மேல் இருக்கும் , ஆஜானுபாகான உடம்பு. நான் , ‘ என்ன தேடறீங்க ..’ அவர் பார்வை எதையோ துருவிக் கொண்டிருந்தாலும் பேச்சு சரியாகத்தான் இருக்கும்.’
‘ ஒன்னுமில்லப்பா... இந்த ராசா பையன் தொல்ல தாங்கல..விக்கறதுக்கு வச்சிருந்த கோழியை திறந்துட்டான்... நல்ல செவத்த கோழி .. அது இங்க திரியுதாணு பாக்க வந்தேன்..’
‘இல்லையே ! அப்பவே எங்க கோழி குஞ்செல்லாம் திறந்துட்டாச்சு...எல்லாம் வெளில மேயுது..அதோட சேர்ந்திருக்கா பாருங்க....’
பக்கத்துல வைக்கப் படப்பு வரைக்கும் போய் பார்த்துட்டேன்...காணலியே..
இதைக் கேட்டுக் கொண்டே பாட்டி உள்ளிருந்து வந்தார்... ‘ கூலு ! அதுக்கு என்ன தெரியும்னு அதுக்கிட்ட பேசிட்டிருக்கே.. மருதன் வருவான் , அவனைக் கேளு என்று மறித்து சொல்ல... அவர்...’சரி சரி கண்டீங்கன்ன அடைச்சு வைங்க ..’ என்று சொல்லிச் சென்றார். உடனே காலைத் தாங்கி ஊன்றி ஊன்றி வேகமாக பாட்டி உள்ளே சென்றுவிட்டது. என்னமோ ஒரு நினைவில் நானும் உள்ளே வர ... கை ஜாடையால் இரண்டு கிழவிகளும் பேசுவதைக் கண்டு அருகே சென்றேன்.. அங்கே பின் கொட்டத்தில் வேகம் ,வேகமாக உதிர்ந்த சிறகுகளை வாத்தியாரம்மா களைந்து சுத்தம் செய்ய , பாட்டி பின் தாழ்வாரத்தில் எதையோ குனிந்து தேட .. கவித்திருந்த கடவுப் பொட்டியைத் திறக்க சாம்பக் கோழி ...! காவு நாங்க கொடுக்க இருந்த கோழி எகிறிப் பறந்தது.... ‘ ‘வாத்தியாரம்மா ஏன் இப்படி செஞ்ச... ‘....என்னம்மா நீதானே அந்தக் கோழியைப் பிடின்னு சொன்னே...!' எனக்கு எல்லாம் விளங்கியது...அவர்கள் அறியாமல் கூளுபிள்ளை வீட்டு கோழியை சமைத்தது.. நான் யாரிடம் என்ன சொல்ல ! எதைச் சொல்ல... ! கமுக்கமாய் மூவரும் இருந்து கொண்டோம்...இதை சொல்வது கேவலம் என்று வீட்டில் மற்றவருக்கும் தெரியப் படுத்தல... பெரிசுக நடந்துகிட்டதை நினைச்சா சிரிக்கவும் தோனல..கோபமும் வரல...என்ன பண்றது.


கோதை தனபாலன் .

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல.. .. //



‘குமார் ..!’
‘இதோ வந்துட்டேன் ஐயா ..!’
‘இந்தா இந்த ஃபைல எல்லாம் எடுத்து கட்டு.. வண்டில எடுத்து வை. ‘ டிரைவர் கோவிந்தனை ரெடியா ஜீப்ல ஆபீசெர்ஸ் எல்லாத்தையும் அழைத்து வர சொல்லு. சரிய
ா பத்துமணிக்கு கேம்ப் கிளம்பியாகணும்.’
இது முத்துசாமி கமிஷனர். ஒரு உயர் நிலை அதிகாரி.
தங்கள் படிப்புக்கு பெருமை சேர்க்க அன்று அரசு வேலைக்கு சேர்ந்து பணியாற்றும் தன்மைத்தவரில் இவரும் ஒருவர்.

'சரி லீலா ! நான் ஆபீஸ் கிளம்பறேன். அவள் கொண்டு வந்த காபி குடித்து விட்டு , பூட்ஸ் மாட்ட ,
லீலா... ‘ கேம்ப் போனால் நேரம் ஆகிடுமா..இரவு நேரம் சென்றிடுமா.. பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்து வர வண்டி.. .... ‘ ஏற்பாடு பண்றேன்.. தெரிந்த ஆட்டோவை டயத்துக்கு அனுப்பி வைக்கிறேன்.

கேம்பில்..கெடுபிடி. வேண்டியவை சிக்கியது... அரசுக்கு இவர்போன்ற அதிகாரிகளால் வரி வருமானம் பாக்கி இல்லாமல் வசூலாகிறது. மாநில வருமானம் ..மற்ற துறை ஊழியருக்கும் சம்பளம் போட பயன்படுத்தப் படும். இவையெல்லாம் அரசு கணக்குகள்.இவற்றை எல்லாம் லீலா உணர்ந்தே இருந்தாள். அவளிடம் முத்துசாமி ஆபீஸ் விஷயங்களைப் பற்றி பேசுவதுண்டு. அவளும் படித்தவளாதலால் புரிந்து கொள்ளுவாள். மத்திய அரசு அதிகாரி, மாநில அரசு அதிகாரிகள் ஒருவருக்கொருவர் செயல்பாடுகளை எப்படி புரிதலுடன் நடத்துகின்றனர் என்றெல்லாம் அவளிடம் சொல்லி விளக்குவார். சிலநேரம் இவளும் அவரிடம் வாதம் பண்ணுவாள். ‘ இந்த அரசு இத்தனை கோடி ரூபாய்க்கு டார்ஜெட் வைத்துள்ளது ..’ முத்துசாமி.. ;
இப்படியே டார்ஜெட்...ஐ உயர்த்திப் போனால் அவனவன் செய்யும் தொழிலை விட்டு விடமாட்டானா.. அப்படி நின்று விட்டால்.. வேலை யார் கொடுப்பார்கள்..’ லீலா கூறுவாள். ‘கறுப்பு பணம் சேரக் கூடாது..அதுதான் கணக்கு..’ ..இது முத்துசாமி ‘
‘அதற்குத்தான்..கோயில், பள்ளி, அநாதை விடுதி, மருத்துவமனை போன்றவற்றை அவர்கள் நிர்வகித்து வந்தால் வரி விலக்கு கொடுக்கிறீர்கள்... அதற்கு மேலுமா கறுப்பு பணம் சேரும்..’ .. லீலா
‘நீ எதெடுத்தாலும் வித்தியாசமா யோசிக்கிற.. எல்லாருமே என்னைப் போல் இருக்க மாட்டார்கள்.’
இப்படி அவர்கள் பேச்சு சமூகத்தைச் சார்ந்ததாய் இருக்கும்.

முத்துசாமி கூறியது லீலாவுக்கு உணர்த்த அந்த நாளும் வந்தது. ஒரு நாள் மாலையில் முன்னிருட்டு நேரம் பலத்த சிந்தனையோடு வந்த கணவரை.. அவள் ஒன்றும் கேட்கவில்லை. பிள்ளைகளிடமும் அவர் சரியாக முகம் காட்டி சிரிக்க வில்லை என்பதை உணர்ந்தாள். சரி தானாக சொல்லட்டும் என்று வாளாவிருந்தாள். மறுநாள் அவர் ஆபீஸ் செல்லாமல் வீட்டிலிருந்தே ஃபைலில் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார். மதியம்போல் லீலாவிடம் தன் மனத்தாங்கலை வெளியிடலானார்.

‘லீலா! எவ்வளவு ஆசையாக இந்த வேலையில் சேர்ந்தேன். இந்த அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு பொறுப்பில்லாமல் நடக்கிறார்கள். ஜனங்களை முட்டாளாக்கி சோம்பேறி களாக்குகிறார்கள். இன்றைக்கு இந்த புதியஅரசில் இந்தத்துறை மந்திரி பணம் சி.எம் கேட்கிறார் என்று எல்லை மீறி வசூல் பண்ணச் சொல்கிறார். இந்தத்துறைக்கு மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் இதே நிலைமை. நான் உள்பட ஒவ்வொருவருக்கும் இவ்வளவு என்று தொகை நிர்ணயம் பண்ணியுள்ளனர். எனது பெரிய அதிகாரி கூப்பிட்டு சொல்லி விட்டார். எல்லாம் வரும் தேர்தலில் நல்லபேர் எடுக்கனும்னு ஒரே குறிக்கோள்ள எல்லாரும் நிற்கின்றனர். மக்கள் நலத் திட்டங்கள் யாவுமே இதனால் கிடப்பில் தூங்குகின்றன. என் மனது தாங்கல.... கஷ்டமா இருக்கு.
லீலாவிற்கு அவள் கணவன் பற்றி தெரியும்... அந்த நேர்மையை அவளும் விரும்புவாள். ஒருமுறை முத்துசாமி பெயரை சொல்லி கீழ்நிலை அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கியுள்ளார். சில மாதம் கழித்து கொடுத்தவர் இவரிடம் வந்து இதுபோல் நடந்தது... தங்களுக்கு பணம் சேர்ந்ததா என கேட்க.. இவர் வெகுண்டு..’ ஏய்யா! உங்களுக்கு சம்பாதிக்கதான் தெரியுதே ஒழிய ஆளை பணவிஷயத்தில் சரியாக எடைபோடறதில்ல...எல்லாருமே ஓரே மாதிரி லஞ்சம் வாங்கறவங்கனு நினைக்காதே, வந்தவர்,

‘சார் ! அப்படின்னா அந்த அதிகாரிக்கிட்ட நான் தந்த 50,000 ரூபாய் கொஞ்சம் வாங்கித் தந்திடுங்களேன். உடனே இவர் காரமாக உங்க எச்சிபுத்தி உங்களை விட்டுப் போகாது...போ.போ..யார்கிட்ட கொடுத்தியோ அவன்கிட்டே நீயே போய் கேளு... நீ க ட்டவேண்டியதை கட்டிடு..வேறு வழி இல்லை ‘ என்று சொல்லி அனுப்பியது அவள் மனதில் கணநேரம் தோன்றி மறைந்தது.
‘ சரி, இப்ப இதற்கு என்ன செய்றதா உத்தேசம்...பேசாமல் விடுப்பு எடுத்துக் கொள்ளுங்களேன்..’
‘ அது சரிப்படாது , தேர்தல் வர்றவரைக்கும் இது செல்லும்... சாயந்தரம்..கீழ் உள்ள ஆபீசர்ஸ் ..ஐ வர சொல்லியிருக்கேன் ... டீ ரெடி பண்ணு. அவர்களும் வந்தனர்...சம்பாஷனை லீலா காதிலும் விழுந்தது.

‘ இங்க பாருங்க சார்..மந்திரியோ ,சி.எம். ஒ தங்கள் நிலை மாறுவதை இல்லை. அடுத்த அரசு வந்தாலும் இனி இதே நிலைப்பாடுதான். நான் நேரடியாக வசூல்ல இறங்கலை. உங்களுக்கு பதவி உயர்வு, பிடித்த இடத்திற்கு வேலை மாற்றம் உடனடி வேண்டுபவர் இக்காரியம் செய்து நேரிடையாக மேலதிகாரையோ ,மந்திரியையோ கண்டுகொள்ளுங்கள்..தேடிக் கொள்ளுங்கள். எனக்கு ஆட்சேபனை இல்லை. எதிலும் என் பெயர் கூடாது..’

இவ்வாறு சொல்லி அனுப்பி வைத்தார்.
லீலா, மனதில் பரவாயில்லை... இவரும் எப்படி தீர்க்கமாய் சொல்லிவிட்டார்.. இதில் ஜெய்ப்பது என்ற நிலைப்பாடு இல்லை. தான் கொண்ட கொள்கையில் தவறாத நிலைக்கு தன மனதில் செய்துகொண்ட ...அறம் சார்ந்து ஒரு உடன்படிக்கை... ! அவர் கையில் கரைபடவில்லை. அவள் மனம் பூரித்தது.


கோதை தனபாலன்.
அருமையில் எளிய அழகே போற்றி 
கருமுகில் ஆகிய கண்ணே போற்றி 
மன்னிய திருஅருள் மலையே போற்றி 
என்னையும் ஒருவன் ஆக்கி இரும் கழல் 
சென்னியில் வைத்த சேவக போற்றி.


...திருவாசகம் .. போற்றித் திருவகவல் திருச்சிற்றம்பலம்