Sunday, October 2, 2011

அனுபவ முத்திரைகள்: பெருமாள் சங்கதி

அனுபவ முத்திரைகள்: பெருமாள் சங்கதி: மதுரையில் சித்திரை திருவிழா வைபவம் யாவரும் அறிந்ததே .இதில் ஒரு விசேஷம் என்ன வென்றால் ராமநாதபுற மாவட்டத்திலிருந்தும் தங்கள் விளைச்சலை சுமந்து...

பெருமாள் சங்கதி

மதுரையில் சித்திரை திருவிழா வைபவம் யாவரும் அறிந்ததே .இதில் ஒரு விசேஷம் என்ன வென்றால் ராமநாதபுற மாவட்டத்திலிருந்தும் தங்கள் விளைச்சலை சுமந்து எடுத்து வந்து அழகருக்கு காணிக்கையாக்கி நாலு நாள் இருந்து செல்வர். சர்க்கரை வைத்து சொம்பில் தாங்களே தீபம் காட்டி வணங் குவாரும் உண்டு.  நீர் பாய்ச்சி வழி நெடுக ,வேஷம் பல புனைந்து ஆடிச்செல்வாரும் உண்டு. வர்ணிப்பு பாடல்கள் பல தலைமுறையாய் பாடி போற்றி வணங்குவர்  பலர்.ஊருக்குள் சாமீ பவனி வருகையில் மண்டபபடி வைத்து மரியாதை பெற்று அன்ன மிடுவர் பலர்.ஊருக்கு வெளியில் சிற்சில இடங்களில் சாமீ தரிசனம் செய்துஅன்னதானம் பன்னுவாரும் உண்டு.இத்தனைக்கும் இடையே பெரிய பெரிய உண்டியல்கள் வரிசையாக வந்து செல்லும்.இதில் விழும் காணிக்கைகள் அனைத்தும் அந்த அழகனையே சேரும். இவை யாவும் வைகையின் வடகரையில் நடக்கும் நிகழ்வுகள்.

தரிசனம் செய்வோர் எல்லோரும் அந்த உண்டியலில் பிரத்யேகமாக காசு காணிக்கை அளிப்பார்.நானும் ஊருக்கு வந்த புதிதில் இவையெல்லாம் புதிய பார்வையில் புரிந்து மனமகிழ்ச்சிஅடைவேன்.உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது வீட்டார் நாலனாவோ எட்டனாவோதான் கொடுப்பார். கூடுதலாகத்தான் போட்டால் என்ன, வருடம் ஒருமுறைதானே திருவிழா என்று அவர்களிடம் அங்கலாயிப்பேன் .இப்படியே சில வருடங்கள் ஓடியது.  வெளியூர் வாசம் புரிந்து மறுபடியும் ஊர் வந்து சேர்ந்தேன்.அன்று அதே திருவிவிழா .மனம் பிரகாசத்துடன் அழகனை தரிசிக்க செல்கிறேன். இந்த தடவை நான் யாரிடமும் வாங்கி செலவழிக்க வேண்டியதில்லை .நம் விருப்பம் போல் காணிக்கை செலுத்தவே என் மனம் மேலோங்கி நின்றது.அழகரும் வந்தார். நல்ல அருமையான தரிசனம்.பிரசாதங்கள் விரும்பியபடி கிடைத்தது.அனைவர் மனதும் குளிர்ந்தது என்றால் மிகையாகாது. காணிக்கை செலுத்த ஐம்பது ரூபாய் எடுத்துக் கொண்டு வண்டி அருகே செல்ல யத்தனிக்கிறேன்..அந்தோ எங்கேயும் அந்த வண்டி கண்ணில் படவே இல்லை.வரிசை வரிசையாய் நின்று நிதானித்து வரும் வண்டிகள் வந்திருந்தன...ஆனால் என் கண்ணில் ஒருமணி நேரம் தேடியும்..........படவே இல்லை. மனம் நொந்தேனே ஒழிய காணிக்கை செலுத்த முடியாது வாளாவிருந்தேன்.......மாயன் செய்த லீலைதான்...இது.   வீடு திரும்பிய என் மனதில் பரவசம் மறைந்து....குழப்பமான வேதனையே எஞ்சியிருந்தது.
விடுவேனா......எங்களது பூஜை அறையில் உண்டியலில் அவனது காணிக்கையாக செலுத்திவிட்டேன்.   அதுசமயம் தான் ஒரு விஷயம் விளங்கியது. நாம் இனிமேல் குறிப்பாக இந்த பெருமாளை தரிசிக்கும் போது 
நான் ஒரு பிச்சைக்காரி என்ற நினைவிலேதான் இருக்க வேண்டும். மாறி அதை செய்வோம் இதை செய்வோம் என்று குறிப்பாக இறுமாப்பில் இருந்தால் அவன் அதை ஏற்றுகொள்ள மாட்டான்.நான் இறுமாப்பில் செய்யாவிட்டாலும் ,நம்மை தரிசனம் பண்ண வைப்பதே அவன் மனம் வைத்தால்தான் உண்டு என்று புரிந்து கொண்டு ஒரு பயம் கலந்த பக்தியையே அவனிடம் செலுத்தி வருகிறேன். இறுதியில் இதுதான், தான் என்ற அகந்தையை என்னுள் படிய விடாமல் செய்துவிட்டது என்ற உண்மை புரிய என்னுள் நிரந்தர பரவசத்துடன் அந்த அழகனை வணங்கிச் செல்கிறேன். 



கோதைதனபாலன்