Thursday, January 26, 2012

வள்ளலார்


அருளமு தெனக்கே யளித்தெரு ணெறிவாய்த்
தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே

சத்தெலா மாகியுந் தானொரு தானாஞ்
சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே
எங்கே கருணை யியற்கையி னுள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே

யாரே யென்னினு மிரங்கு கின்றாற்கு
சீரே யளிக்குஞ் சிதம்பர சிவமே

பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்
செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே

கொல்லா நெறியே குருவரு நெறியெனப்
பல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே

உயிரெல்லாம் பொதுவி னுளம்பட நோக்குக
செயிரெல்லாம் விடுகெனச் செப்பிய சிவமே..

.... ராமலிங்க அடிகளார்


நினது அமுதமான அருளை எனக்கீந்து என்னுள் நன்னெறி தன்னை வளர்க்கும் சிவமே !எனது உடலில் இயங்கும் சக்தியில் எல்லாமும்,எனது சித்தமெல்லாமும் நீயும் ஒரு அங்கத்தோடு அங்கமாயென்னை யாண்டு வருகிறாய். இயற்கையின் படைப்பில் ,எல்லா உயிரில் கருணை எங்கெல்லாம்,எப்படியெல்லாம் வெளிப்படுகிறதோ அங்கெல்லாமும் நீயே வியாபித்திருக்கிறாய். எத்தகையவர் ஆயினும் அவர்தம் மீது இரங்கும் மனதினருக்கு எல்லாச் சிறப்பும் ,செல்வமும் சிதம்பரத்தில் உறையும் சிவமே நீ அளிக்கிறாய்.
பொய்மையான , மாயம் நிறைந்த பாதையில் என் மனம் போகா வண்ணம் என்னுள் புகுந்து நன்னெறியில் என்னை செலுத்தும் சிற்சபை கொலுவிருக்கும் சிவமே...
உயிர் வதை செய்யாதிருப்பதே குரு போற்றும் அருள்நெறி என்று பலகாலும் உணர்த்தும் மெய்ப்பொருளே.. இதனால் எல்லா உயிர்களையும் மனதார ஒன்று போல் பார்க்கும் மனத் திண்மையை பெறவைத்து யாவருக்கும் அதை எடுத்துச் சொல்லுதல் முறையே எனக் கூறும் சிவமே... 

என்றெல்லாம் சொல்லி வருகிறார்.. இது 
‘அருட்பெருஞ்சோதி அகவல்’




 கோதைதனபாலன்

No comments:

Post a Comment